Thursday, August 26, 2010

கட்டறுத்த கயிறு

தொப்புழ்க்கொடி யறுத்த
தாயி னுறவு

தோளில்வைத்து தாங்கிய
தந்தையி னுறவு

ஒவ்வொரு பிறந்தநாளையும்
ஒவ்வொரு விதமாய்
சிரித்துக்கொண்டே நினைவூட்டிய
சகோதர னுறவு

செல்லசண்டையில் சிணுங்கிய
சகோதரியி னுறவு

தளர்கைகளால் கன்னம்வழித்து
கதைகள் பலகூறி
கற்பனைகள் வளர்த்த
பாட்டியி னுறவு


வெள்ளியாறு போல
வெண்ணிலாவை வீட்டினுள்
வரவழைத்துத் தந்த
ஜன்னல்கம்பியி னுறவு

தினமொரு சிநேகம்
தேடித் தந்த
கொல்லைரோஜாவி னுறவு

வேகவைத்த வெய்யிலின்
வெப்பம் தணித்த
வேப்பமரத்தி னுறவு

வம்புபேசி வாயளந்த
அடுத்த வீட்டு
வனிதா அக்காவினுறவு

மழலை கொஞ்சி
முத்தத்தில் முகம் நனைத்த
அவள் குழந்தயினுறவு

குட்டியாகவே இருந்துவிடாதா
என்று ஏங்கவைத்த
கண்மருண்ட கன்றினுறவு

எல்லாவற்றையும் கட்டிபோட்டு
இழுத்துவந்துவிட்டேன் இவளை

ஒரு முழத்தில் -
நான்கட்டிய தாலிக் கயிறு...

தெரிவதில்லை...

தினம் தினம் பார்ப்பதுதான்
என் முகத்தை...

தலைவாரும் போதும்
முகம்துடைக்கும் போதும்
சவரம்செய்யும் போதும்

தினம் தினம் பார்ப்பதுதான்
என் உடலை...


உடற்பயிற்சி செய்யும்போதும்
குளிக்கும் போதும்
உடைமாற்றும் போதும்

ஆனாலும் தெரிவதில்லை...
என்னடா கருத்துட்டே
என்னடா இளைச்சுட்டே
என்று அம்மாவும் நண்பரும்
கேட்கும்வரை...


சந்தோஷம்

நாளை வார விடுமுறை
இன்று சம்பள தினம்
வெப்பம் அதிகமில்லாத மாலை
கூட்டம் இல்லாத பேருந்து
பிரயாணத்தின் போது படிக்க
பிடித்த மான புத்தகம்
நான் -
சந்தோஷமாக இருக்கிறேன்...

Thursday, August 5, 2010

குழந்தையின் சாய்ஸ்...

வாடா ராஜா வா வா
வட்டமிட்டு சுற்றுமிந்த வண்டிபார் வா
இந்தாடா செல்லம் இங்கே வா
பந்தாடச் சொல்லும் பொம்மைபார் வா

ஹெலிகாப்ட்டர் வேணுமா ஏரோப்லேன் வேணுமா?
எப்போதும் சிரிக்கும் கரடிபொம்மை வேணுமா?
எடுத்துக்கொள் கண்ணே எல்லாம் உனது
ஏங்கியழும் ஏன் உன் மனது?

சொல்ல முடியா கூட்டத்தில்
அள்ள முடியா அளவில்
எல்லாமிருந்த கடையில்
எதுவுமில்லா நிலையில்

'என்ன வேண்டும்'
என்ற கேள்விக்கு
'ம்ம்மா' என்றது
கூட்டத்தில் தொலைந்துபோன
குழந்தை...

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....

ஏறி இறங்கிய எண்ணிக்கை
எகிறிப் போனாலும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தை
விடாது பற்றியிருக்கும்
வாலிபர்கூட்டம் எனது

கூழுக்குத் திருடியவனை
கூண்டுக்கு அனுப்பிவிட்டு
கோடிகள் திருடியவனை
கோட்டைக் கனுப்பும்
கில்லாடிகள் எம்காவலர்...

பார் முழுதும் பார்கள் பார்
தீர்ந்ததா தண்ணீர் பஞ்சம்...?

மீன் கேளாமல்
தூண்டில் கேட்டேன்
புழுவாகிப் போனேன்...!

வந்துவிட்டனர் மறுபடி
வாய் நிறைய வாக்குறுதிகளோடு

(வாய்யா வா....)

மத்திக்கு அனுப்பிவைப்போம்
மனம்நிறைய கனவுகளோடு

(எடுடா அந்த போஸ்டரை )

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....